Thursday, July 2, 2009

முதன் முதல்..!!



முதல் பள்ளி ஆயத்தம்,

முதல் கல்லூரி நுழைவு,

முதல் நேர்முகத் தேர்வு,

முதல் வாங்கிய வேலை,

முதல் மாதச் சம்பளம்,

முதல் வெற்றி,

முதல் காதல்,

முதல் முத்தம்,

முதல் ஸ்பரிசம்..

முதல்களின் நீளங்கள்

முடிவிலியாகினும்..

உன் மென்பஞ்சு

கால் கொண்டு

என் வயிற்றில் நீ தந்த

முதல் உதைதனை

நானுணர்ந்ததுக்கு ஈடாகுமா??!!



என்னுள் வளரும் இளம்பூவே..!

உனை உணர்ந்த கணத்தில் தான்

நான் முழுதாகினேன் கண்ணே...!!

__________________
-- பூமகள்.

Wednesday, June 24, 2009

சர்தார்ஜியுடன் ஓர் பயணம்..!

சர்தார்ஜியுடன் ஓர் பயணம்..!

வெளி நாட்டு வாழ்க்கையின் எல்லா வித சாதக பாதகங்களும் ஓரளவு அறியப் பெற்ற நாட்களின் ஓர் நாளின் பின் மாலைப் பொழுதில் இரவுணவு முடித்துவிட்டு டாக்சி ஏறி அமர்ந்தோம்.

அது வரை வேற்று நாட்டு முகங்களையே ஓட்டுனர் இருக்கையில் பார்த்தும், புரியாத பெயர் கொண்டு ஒட்டப்பட்ட அடையாள அட்டை கொண்ட காரின் முன் கண்ணாடியும், புரியாத மொழியில் இரைச்சல் பாடல் கேட்டும், அரைகுறை ஆங்கிலம் பேசும் ஓட்டுனரையுமே பார்த்துப் பயணப்பட்ட எனக்கு அன்று வித்தியாசமான அனுபவம்...

ஆம்.. எப்போதுமே டாக்சி ஏறியதும் செய்யும் முதல் காரியம், பெயரைப் பார்த்துப் படித்துக் கொள்வது.. ஏறி அமர்ந்த உடனேயே அழகிய ஆங்கிலத்தில் இயல்பாக பேசும் அந்த வயதான ஓட்டுனரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்..

பின் பெயரைப் பார்த்ததும் மேலும் ஆச்சர்யம்.. சுக்வந்தர் சிங்.. ஆஹா.. இந்தியர் ஒருவரின் காரில் பயணப்படும் முதல் பயணம் இது என்று மனம் குதூகளித்தது.. ஆனால், சிங்குக்கான தலைப்பாகையும் தாடி மீசையும் இல்லாமல் சாதாரண மனிதர் போலவே இருந்தது மேலும் பல்மடங்கு ஆச்சர்யத்தை அளித்தது..

மெல்ல பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.. என்னவரோடு உரையாடிய உரையாடல், அவர்கள் பற்றி "அபியும் நானும்" படத்தில் தலைவாசல் விஜய் பிரகாஷ்ராஜுக்கு சொல்கையில் பிரகாஷ் ராஜ் கொடுக்கும் ஆச்சர்ய முக பாவமே எனக்கும் பயணம் முழுதும் ஏற்பட்டது..

அவரோடு உரையாடியதிலிருந்து என் நினைவில் இருக்கும் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்..

பேச்சு முதலில் பரஸ்பர ஆரம்பம், இந்த நாடு பிடித்திருக்கிறதா?? எத்தனை ஆண்டுகள் இங்கு இருக்கிறீர்கள்?? என்று வரிசையாக கேட்டு பதில் பெற்ற ஓட்டுனர் அவரே அவர் பற்றி பல தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார்..

சில காலம் இந்தியாவின் சென்னையில் தங்கியிருந்ததாகவும்.. அங்கே சாலை விதிகளையும், சிக்னல்களையும் மதித்து நடக்காத மக்களின் போக்கையும் நகைச்சுவையோடு சொல்லி சிரிப்பில் ஆழ்த்தினார்..

இவரின் அன்றாட பொழுதுபோக்கு, தினமும் சைக்கிளில் சென்று சென்னையில் ஏதேனும் ஒரு ட் ராப்பிக் சிக்னல் இருக்கும் இடத்தில் நின்று அங்கு பணி செய்யும் டிராப்பிக் போலீஸையும் மக்களின் போக்கையும் படம் பிடித்து வேடிக்கை பார்ப்பது என்று சொன்னார்..

இன்கிரிடிபில் இந்தியா என்று நகைச்சுவை பொங்க சொன்னார்... என்ன தான் வெளி நாடு ஆயினும் நம்ம நாடு போல வருமா?? எத்தனை மகிழ்ச்சிகரமான இடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நாடு.. இங்கு எங்கு திரும்பினாலும் வணிக வளாகங்கள் தானே?? என்று கேட்டு நம் துக்கத்தில் பங்கெடுத்தார்..

பின்னர் அவரின் அழகிய ஆங்கிலப் பேச்சுக்காண காரணம் புரிந்தது.. கொஞ்ச காலம் அமெரிக்காவில் டாக்சி ஓட்டி வந்ததாகவும், போர் அடித்ததால் இங்கு வந்து சில வருடம் ஆகிறதென்றும் சொன்னார்..

இந்த நாட்டில் இந்தியர்கள் வந்து படும் பாடு பற்றி சொன்னார்.. அத்தனையும் நிஜமென்றே ஆமோதிக்கும் படி இருந்தது.. திரைகடல் ஓடி திரவியம் தேட வரும் நம்மவர்கள் வந்ததும் இங்கு தங்கும் செலவுக்கே பாதிக்கும் மேல் வருமானத்தை இழந்து தவிக்கும் போக்கைப் பற்றி வருத்ததோடு விளக்கினார்..

சென்னையில் தனக்கு அடையாரில் சொந்தமாக வீடு இருப்பதாகவும், அதை யாரோ ஒருவர் ஆக்கிரமித்துவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.. ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட அவருக்கு அளிக்கப்பட்ட யோசனையை நகைச்சுவை பொங்க கூறியது தான் உச்சம்..

இவரது நண்பர் ஒருவர், ரவுடி கும்பலுக்கு பணத்தைக் கொடுத்து சொத்தை மீட்டுவிடலாம் என்று சொல்ல, மற்றொருவரோ, பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் பெயர் சொல்லி அவரைச் சந்திக்க கூட்டிச் செல்வதாக சொல்லியிருக்கிறார்.. மற்றுமொருவர், அந்த தலைவரின் மகனைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்..

இவற்றுக்கெல்லாம் இவர் அளித்த பதில் தான் பெரும் காமெடி..

தாதா கும்பலுக்கு பணம் கொடுத்தால் கொஞ்ச பணம் போகும்..
தலைவரின் மகனைச் சந்தித்தால் பாதி சொத்து போகும்..

தலைவரைச் சந்தித்தாலோ முழு சொத்துமே போகுமே என்று சொல்லிச் சிரித்தார்.. அதில் இருக்கும் உண்மை உறைத்தது..

இறுதியில் நேர்மையாகவே போராடுவோம் என்று வழக்கு தொடுத்து, பல வருடங்களாக சிவில் கேஸ் நீதிமன்றத்தில் நடப்பதாகச் சொன்னார்..

அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடவே, மேலும் பேசும் ஆவல் இருந்தும் ப்ரியாவிடை பெற்றோம்..

அத்துணை நேரம் பேசிய பேச்சிலிருந்து எனக்கு ஒன்று மட்டும் விளங்கியது..

சர்தார்ஜிக்கள் உண்மையிலேயே மிக அதிக தைரியமும் அறிவுக் கூர்மையும் நிறைந்தவர்கள்... அவர்களின் தொலை நோக்குப் பார்வையும் ஒரு விசயத்தை ஆராயும் போக்கும் உண்மையிலேயே வியக்க வைத்தது..

இப்போதெல்லாம் எங்கள் பகுதியில் இருக்கும் நூலகத்துக்கு செல்லும் போதெல்லாம் அங்கு செக்குயூரிட்டியாக நிற்கும் சர்தார்ஜி தாத்தாவைத் தாமாகவே என் கண்கள் தேடுகிறது.. எந்த சர்தார்ஜியை வழியில் பார்த்தாலும் பெருமை கொள்கிறது மனம்..!

Saturday, May 16, 2009

யாமம் - நாவல் விமர்சனம்

"யாமம்" - நாவல் விமர்சனம்

- ஒரு வரலாற்றுச் சமூக நாவல்
நூலாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: 225/- ரூபாய்.



எஸ்.ரா அவர்களின் எழுத்துகளின் வீரியமும் ஆழமும் அறியப்பெற்ற பின் அவரின் அனைத்து படைப்புகளையும் படிக்கும் முனைப்பு மெல்ல மெல்ல என்னில் வேர்விடத் துவங்கியிருக்கிறது.

அவ்வகையில் இது அவரின் படைப்பில் நான் படிக்கும் மூன்றாவது புத்தகம். "நடந்து செல்லும் நீரூற்று", "ஏழுதலை நகரம்" என்ற இரு புத்தகங்களும் முதன் முதலில் நான் படித்த அவரின் புத்தகங்கள்.

யாமம் இவ்விரு புத்தகங்களிலிருந்தும் பெருத்த வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை அது கொண்ட குறு பின் அட்டை விளக்க உரையே விளக்கியது.

"நடந்து செல்லும் நீரூற்று" - எஸ்.ரா அவர்களின் எதார்த்த வாழ்வின் முகங்களைக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு.

"ஏழுதலை நகரம்" - குட்டீஸ் விகடனில் வெளியான குழந்தைகளுக்கான மாயஜாலக் கற்பனை நகர் பற்றிய கதை.

இவ்விரு புத்தகங்களுமே என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. ஆயினும் அவற்றுக்கெல்லாம் விமர்சனம் எழுத ஏனோ என்னுள் தைரியம் இல்லாமல் இருந்தது. காரணம், அவரின் அத்தனை வலிமையான எழுத்தாளுமை.

ஆனாலும், நல்லப் புத்தக வாசிப்பு ஒரு சிறந்த நண்பருடன் உரையாடுவதை விட எனக்கு அதிக மனத் தெளிவைத் தந்துவருவதும் உணர்ந்த ஒன்று.

தனிமைக் கதவுகள் தாழிட்ட போதிலும்.. என்னைக் கற்பனையில் பிரபஞ்சம் அளக்கச் செய்பவை புத்தகங்களே.

அவ்வகையில் யாமம் பற்றிய என் உணர்வுகளையும் விமர்சனத்தையும் வழங்க நான் கடமைப்பட்டவளாகிறேன்.

யாமம் என்ற நாவல், புரியாத புதிர் போல மெல்ல மெல்ல நம் முன் விவரிக்கப் படுகிறது. வெவ்வேறு கிளைகள் பரப்பி அதன் மாட்சிமையை பிரம்மிக்கச் செய்கிறது.

யாமம் என்ற நாவலின் கதைக் களம் நான்கில் மூன்று பாகம், சென்னை என்றழைக்கப்படும் பண்டைய மதராப் பட்டிணத்தைச் சுற்றியே அமைந்திருக்கிறது. கப்பலில் வணிகத்துக்காக வந்திறங்கிய ஆங்கிலேயர் வசம் எப்படி மதராப்பட்டிணம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைக் குழைத்துக் கொண்டது என்பதை கற்பனையும் எதார்த்தமும் சரிவிகிதத்தில் கலந்தளித்து நம்மை எதார்த்ததைப் பிரித்தறிய இயலாதபடி அமைந்திருக்கிறது கதை.

நாவலின் மாட்சிமை பல கிளைகளோடு அமைந்திருந்தாலும், அதன் முக்கிய பாத்திரங்கள் நம் பயணமெங்கும் சரி விகிதத்தில் பங்கெடுக்கின்றனர்.

அவர்கள், அப்துல் கரீம், பத்ரகிரி, கிருஷ்ணப்ப கரையாளர், சதாசிவப் பண்டாரம் ஆகியோர் ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், யாமம் என்ற அர்த்தர்(வாசனைத் திரவியம்) மூலம் ஒருங்கே கூடி நம் நெஞ்சில் வாசத்தைப் பரப்புகிறார்கள்.

அந்த அர்த்தரின் காண இயலாத வாசனை போலவே இந்த நால்வரின் வாழ்க்கையும் பல புலப்படா சூட்சுமங்கள் நிறைந்து எவ்வகையில் முடிவுக்கு வருகிறது என்பதில் நாவல் எதார்த்தத்தைப் பின்னியிருக்கிறது.

ஆங்காங்கே,கரீம் கனவில் வரும் பக்கீர் என்ற மூதாதையரின் இரவுக்கும் கடலுக்குமான கேள்விகளும், விடைகளும் நம்மையும் ஆழ்ந்த சிந்தையில் ஆழ்த்துகின்றன. நாவலின் மிகச் சிறப்பான பகுதியாக இவைகளை நான் சொல்வேன்.

கரீம் கனவில் காணும் பக்கீர் அவருக்கு வழிகாட்டுவதும், "யாமம்" என்ற வாசனைத் திரவியம் மூலம் பெரும் செல்வந்தர் ஆவதும், அவரின் மூன்று மனைவிகளான சுரையா, வஹிதா, ரஹ்மானி ஆகியோரை விட்டுப் பிரிந்து சென்ற பின் ஏற்படும் அந்த அபலை மனைவிகளின் நிலையும் நெஞ்சில் நீங்காமல் ஓர் இடம் பிடிக்கின்றன. கரீமின் குடும்பத்தோடு எல்லா நேரங்களிலும் அருகிருக்கும் சந்தீபா என்ற ஏழைச் சிறுவனின் குணம், அவனின் ஓர் நாளைய கனவு என நாவலின் நகைச்சுவைப் பகுதியும் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது.

தன் சொத்துக்கள் தமக்கே கிட்டவேண்டுமென்று போராடும் கிருஷ்ணப்ப கரையாளர், அவரின் அற்புத மனமாற்றத்துக்கு காரணமான மேல்மலையின் வனப்பு, அவரின் ஒரே சொத்தான மேல்மலையையும் யாரோ ஒரு விலைமகளான எலிசபத் என்ற ஆங்கியேய மங்கைக்குப் பெயர்மாற்றும் கரையாளர் குணம் என்று பிரம்மிக்க வைக்கும் இடங்கள் அதிகம். மேல்மலையைப் பற்றிய விவரிப்புகளும், வர்ணனைகளும் நம்மையும் மேல்மலையில் சில காலம் தங்கவைத்த உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.

திருச்சிற்றம்பலம் என்ற அன்பும், பண்பும், அறிவும் நிரம்பிய தம்பி, அவரின் அன்பிற்கு அருகதையாகாத செயலைச் செய்த பின் வருந்தும் ஓர் அண்ணாக பத்ரகிரி, அவன் மனைவி விசாலா, திருச்சிற்றம்பலத்தின் ஆற்றலைப் புரிந்து கொண்டாலும், உடலாலும், மனதாலும் முதிராத அவன் மனைவி தையல். இவர்களின் தவறுகளும், அதற்கான தண்டனைகளும் மிகச் சிறப்பாகக் கதையில் கையாளப்பட்டிருக்கின்றன.திருச்சிற்றம்பலத்தின் பாத்திரம், பெருமை கொள்ளும் படியாக அமைந்திருக்கிறது. உல்லாசக் களிப்பிற்காகவே ஏங்கும் திருச்சிற்றம்பலத்தின் நண்பனாக வரும் சற்குணம், பின் எப்படியெல்லாம் பண்படுத்தப்படுகிறார் என்று நாவல் மிக அழகாக விவரித்திருக்கிறது. சற்குணத்தின் முடிவு மட்டும் எழுதப்படமாலே வாசகர் யூகத்துக்கு விட்டுவிடப்பட்டிருக்கிறது.

சதாசிவப்பண்டாரம் என்ற பண்டாரத்தின் வாழ்க்கை மாற்றம், அவரில் தோன்றும் மனிதருக்கான இச்சைகள், திரு நீலகண்டம் என்று தாமே பெயரிட்டு அழைக்கும் ஒரு நாயின் வழியில் தன்னைச் செலுத்தி இறுதியில் முடிவென்ன என்று நம்மைக் காக்கச் செய்த விதம் என்று நாவலில் அனைத்தும் அருமை. இவரின் செயல்பாடுகளும், அதற்கான நாயின் கண் கவனிப்புமே பதிலாக்கி வாசகருக்குப் புரிவித்திருப்பது சிறப்பானது.

ஆக, இவ்வெல்லாப் பாத்திரங்கள் மூலமும் வரலாற்றுச் சான்றுகளை ஆங்காங்கே விவரித்ததோடு, மனித வாழ்க்கையின் எதார்த்த மீறல்களும், அதற்கான எதிர்மறை விளைவுகளையும் தெளிவாக்கியிருப்பது சிறப்பு.

எஸ்,ரா அவர்களின் மற்ற நாவல்கள் பற்றி நானறியேன். ஆயினும், இந்நாவல் படித்து, இரு நாட்களுக்கு என்னுள் இக்கதை மாந்தர்கள் இரவில் யாமம் என்ற வாசனைத் திரவியத்தோடு என்னைச் சூழ்ந்து கொண்டே இருந்தார்கள்.

எஸ்.ரா அவர்களின் இப்புத்தகம், நிச்சயம் பலரின் மனதிலும் அடர்ந்த வாசத்தை ஏற்படுத்தத் தவறாது.


$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, April 30, 2009

வெயில் கவிதைகள் - 2

நெருஞ்சிக் காட்டு
ஒற்றையடிப் பாதை முள்ளும்..

கோயில் தொடும்
கல் வழிப் பாதை கூர்மையும்..

பதம் பார்க்கும் குதியை
தன் கரங்களால்
பொடித் துகள்களாகச்
சுட்டுக் கொண்டிருந்தான்
துணையாக வந்த
வெப்பக் கதிரோன்..!!

வெயில் கவிதைகள் - 1

அலைந்து திரிந்து
பசித்த மதியத்தில்..
உச்சிக் கதிர்கள்
உச்சி வகிடு வழி
வழியத் துவங்கியிருக்கும்..

எப்போதும் நிற்கும்
மரத்தடி நிழலின்
புழுது படிந்த இலைகளின்
வடிகட்டிய குளுமை
வெப்பக் காற்றோடு
ஈர முதுகு சில்லிக்க வைக்கும்..

ஓரமாய் பானையோடு
கம்பங்கூல் தாத்தாவும்..
அவர் கொண்ட சுத்தமான
ஆறுவகை வற்றல் குவியல்களும்..

நினைவில் எழுந்து
நாவின் நீர் சுரப்பிக்க..
காத்துக் கொண்டிருக்கிறேன்..
அடுத்த வருட
வெயில் காலத்துக்காக...!!
__________________
-- பூமகள்.

விண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..!

உங்கள் வருகைக்கு நன்றி